புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுப் பரவலை தடுக்க பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தையும் சமூக ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி (படம்) மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் நன்றாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
நாட்டின் பிற மாநிலங்களும் டெல்லியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
தனிப்பட்ட சுகாதாரம் பேணப்பட வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கிருமித்தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலும் பரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள், மாநிலங்களின் தயார் நிலை குறித்து பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அப்போது, டெல்லியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய, மாநில அரசுகள் தொற்றை கட்டுப்படுத்த பின்பற்றிய அணுகுமுறையை மற்ற மாநில அரசுகளும் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.
“குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொவிட்-19 சிகிச்சைக்கு மருத்துவமனைகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. எனவே, பிற பொதுவான நோயாளிகளை அவர்களின் வீடு தேடிச் சென்று, மருத்துவ வாகனத்தில் இருந்தபடியே மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் ‘தன்வந்திரி ரத’ திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை பிற மாநிலங்களும் பின்பற்றலாம்,” என பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நாடு முழுவ தும் புதிதாக 28,637 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 8.5 லட்சமாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 நோய்ப்பிடியில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 5.34 லட்சம் என்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,674 என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமருக்கு மோடி வாழ்த்து
சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் லீ சியன் லூங்கிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வெற்றி பெற்றதற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக மோடி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிங்கப்பூர் மக்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வாழ்த்துகள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.