இணைய சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இணைய சூதாட்டத்திற்கு அடிமையானதால் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் அண்மையில் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்நிலையில், இணைய சூதாட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில்,ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக இணைய சூதாட்டத்துக்குள் செல்லும் இளைஞர்கள் பின்னர் அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இணைய சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் தலையிட்டு இணையச் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், சூதாட்ட இணையத்தளங்களை முடக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இணைய சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனுவை வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.