அமராவதி: ஆந்திராவில் மது கிடைக்காததால் கிருமிநாசினி அருந்தி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 36 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் கிருமிநாசினியை வெறும் வயிற்றில் குடித்தால் மதுவுக்கு இணையான போதை கிடைக்கும் என்று பரவிய தகவலை நம்பி, மது அருந்தும் பலர் உள்ளூர் கடைகளில் விற்பனைக்கு இருந்த கிருமிநாசினி திரவத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இதனால் பலரும் வயிற்று வலி, கடும் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.
பிரகாசம், மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம், குண்டூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 36 பேர் பலியாகி உள்ளனர்.
கிருமிநாசினியுடன் வேறு சில பொருட்களையும் கலந்து பருகும் போது போதை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்றும் பலரது மரணம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து அம்மாநில அரசு யோசித்து வருகிறது.
எனவே மதுவுக்கு மாற்றாக கையைச் சுத்தப்படுத்தும் கிருமி நாசினியை வாங்கிப் பருகும் பழக்கம் மதுப்பிரியர்கள் மத்தியில் முன்பே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
நிடாமனரு கிராமத்தில் மருந்துக்கடை நடத்தி வரும் ராமகிருஷ்ணா, தனது கடைக்கு வரும் சில வாடிக்கையாளர்கள் தினமும் ஒரு புட்டி கிருமிநாசினி வாங்கிச் செல்வது வழக்கம் என்கிறார்.
“கைகளைச் சுத்தப்படுத்த மட்டுமே கிருமிநாசினி என்றால், ஒரு மாதத்துக்கு ஒரு புட்டியே போதுமானது. மேலும் சிலர் மொத்தமாக பல புட்டிகள் வாங்கிச் செல்வதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,” என்கிறார் ராமகிருஷ்ணா.
இதையடுத்து விரிவான விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இதற்கிடையே பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆந்திர ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.