இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி தினத்தைக் கொண்டாடுவது ஏன்? என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இந்தி தினக் கொண்டாட்டத்தைக் கண்டித்து கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.
கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட நவநிர்மாண் சேனா உள்ளிட்ட அமைப்பினர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு நகரங்களில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
பெங்களூருவில் ரயில் நிலையம் முற்றுகையிடப்பட்டு இந்தித் திணிப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அகற்றினர்.
நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமையன்று இந்தி தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில் இந்தி தினக் கொண்டாட்டம் என்பதும்கூட இந்தியை திணிக்கும் ஓர் அங்கம்தான் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இந்தி தேசிய மொழி அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்திய அரசியல் சாசனத்திலும் அவ்வாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் முன்பு இத்தகைய போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.