ஊழலைக் கட்டுப்படுத்த முறையான பரிசோதனைகள், வலிமையான தணிக்கைகள், திறன் கட்டமைப்பு ஆகியவை தேவைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் (சிபிஐ) நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாட்டில் காணொளி வசதி மூலம் பங்கேற்றுப் பேசிய அவர், பரம்பரை ஊழல் என்பது பெரும் சவாலாக உள்ளது என்றார்.
ஒரு தலைமுறையால் முன்னெடுக்கப்பட்ட ஊழலை அடுத்த தலைமுறையும் தொடர்வதுதான் பரம்பரை ஊழல் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய ஊழல் நாட்டைக் கரையான்கள் போல் அரிப்பதாகத் தெரிவித்தார்.
ஒரு தலைமுறை ஊழலில் ஈடுபட்டு தண்டனையிலிருந்து தப்புவதால் அடுத்த தலைமுறை அதைவிட பெரிய ஊழலைச் செய்வதாக அவர் கூறினார்.
ஒருவர் வீட்டிலிருந்தவாறே கோடிக்கணக்கான பணத்தை ஊழல் மூலம் ஈட்டியும் எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றால், பின்னர் ஊழல் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிப்பதாக பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.
கடந்த பல 10 ஆண்டுகளாக பரம்பரை ஊழல் படிப்படியாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த ஊழல் ஒரு வலிமையான வடிவத்தை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு நிறுவனத்தின் பணி மட்டும் அல்ல, இது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அமைப்புகளின் கடமை என்றும் பிரதமர் மோடி மேலும் கூறினார்.