கொரோனா கிருமிப் பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட துறையை மீட்டெடுக்க புதிய உத்தியைக் கையாளுகிறது காஷ்மீரில் உள்ள ரிசோர்ட் ஒன்று.
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வரும் வேளையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதத்தில் காஷ்மீரின் குல்மார்க் நகரில் உள்ள கோலஹோய் ஸ்கை ரிசார்ட், பனிக் குடில் உணவகத்தை திறந்துள்ளது. காஷ்மீரில் இத்தகைய உணவகங்கள் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை.
15 அடி உயரம், 26 அடி சுற்றளவுடன் அமைந்துள்ள இந்த உணவகத்தின் கூரை, மேசை உள்ளிட்டவை பனிக்கட்டிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆர்க்டிக் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அடிப்படையாகக் கொண்டு, 16 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இந்தக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
‘இக்ளூ’ போன்ற வடிவுடைய இந்த குடில்களுக்குள் சூடான, சுவையான, பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.
தற்போது ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 7.7 டிகிரி செல்சியஸ் வரை எட்டி மிகவும் குளிரான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.
அங்கு நிலவும் வெப்பநிலை எவ்வளவு, என்னென்ன உணவு வகைகள் கிடைக்கும் என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி உள்ளனர் இணையவாசிகள்.