இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று (மார்ச் 1) தொடங்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
புதுச்சேரியைச் சேர்ந்த தாதி நிவேதாவும், கேரளாவைச் சேர்ந்த மற்றொரு தாதி ரோசம்மா அனிலும் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்டனர்.
தற்சார்பு கொள்கையில் உறுதி கொண்ட பிரதமர் மோடி கோவாக்சின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்துள்ளன.
இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் கோவாக்சின் தடுப்பூசி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியில்லாமல் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது கோவாக்சின். எனினும் கோவாக்சின் தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.
அந்த தடுப்பூசியின் மீதான முழுமையான சோதனைகள் நடத்தி முடிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை கோவாக்சின் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது.