தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படுகிறது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே தமிழக அரசு காவிரி - குண்டாறு திட்டத்தைத் தொடங்கி இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
“இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் தமிழகம் கொள்கை ரீதியான அனுமதி கேட்டுள்ளது.தமிழக அரசின் இந்த நடவடிக்கை காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்புக்கு எதிரானது," என்று முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்துக்கு தமிழகம் தேர்வுசெய்துள்ள இடம் தவறானது என்றும் இத்திட்டத்தால் மண்டியா மாவட்டமும் பெங்களூரு மாநகரமும் நேரடியாக பாதிக்கப்படும் என்று மக்கள் அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மத்திய அரசு, இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறியுள்ள முதல்வர் எடியூரப்பா, இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
காவிரி - குண்டாறு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது என கர்நாடக எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.