மத்திய சுகாதார அமைச்சு: இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவுகிறது
மும்பை: நாடு முழுவதும் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு படுவேகமாக அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் சுமார் 55 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆசியாவின் ஆகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஒரேநாளில் புதிதாக 62 பேர் பாதிக்கப்பட்டது உறுதியானது.
மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3.12 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் பலி எண்ணி்க்கை 56,330ஆக உள்ளது என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இப்போது 472,283 பேர் நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை மாநகரில் மட்டும் நேற்று முன்தினம் புதிதாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு கிருமித்தொற்று பாதிப்புள்ளது கண்டறியப்பட்டது. அங்கு ஒரே நாளில் 31 பேர் பலியாகிவிட்டனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரிக்க புலம்பெயர் தொழிலாளர்களே காரணம் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
"இந்தியாவிலேயே மகாராஷ்டிராதான் அதிக அளவில் தொழில்மயமான மாநிலம். இதனால் இங்கு பணியாற்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர்," என்று ராஜ்தாக்கரே சுட்டிக்காட்டி உள்ளார்.
டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் நெருக்கடியானவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலையின் வேகம் மிக அதிகமாக உள்ளது என்றார்.
இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்று குறிப்பிட்ட அவர், கொரோனா பாதிப்பால் ஏற்படும் பலி எண்ணிக்கையைக் குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம் என்றார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாக தடுப்பூசி, நோய் எதிர்ப்பு மருந்திற்கான அனைத்துலகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்தியாவில் கிருமித்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 115,000ஆக பதிவாகி உள்ளதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.