பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர் கூட்டத்தில் நேற்று தெரிவித்தார்.
"கொரோனா கிருமித்தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
"வழக்கமாக அளிக்கப்படும் சிகிச்சை பலன் தருவதாகத் தெரியவில்லை. இந்த இளையர்கள் உருமாறிய கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்துள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்படும்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா.
மலேசியாவில் சமூக
அளவிலான பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளதாகவும் மலேசிய சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
பாதிப்படைந்த குழுமங்களின் எண்ணிக்கை குறைந்துள்ள
போதிலும் மலேசியர்களிடையே தனிநபர் கொரோனா பாதிப்பு
அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய
நிலவரப்படி மலேசியாவில் மேலும் 4,519 பேருக்கு கொவிட்-19
கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் மலேசியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 436,944ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி மேலும் 25 பேர் மாண்டுவிட்டதாக மலேசிய சுகாதாரத் துறை தெரிவித்தது.
மாண்டவர்களில் 24 பேர் மலேசியர்கள் என்றும் ஒருவர் வெளிநாட்டவர் என்றும் தெரிவிக்கப் பட்டது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக மலேசியாவில் இதுவரை 1,657 பேர் மாண்டுவிட்டனர்.
நேற்றைய நிலவரப்படி கொரோனாவிலிருந்து 2,719 பேர் குணம் அடைந்து வசிப்பிடம் திரும்பினர். மலேசியாவில் இதுவரை மொத்தம் 398,723 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பிறப்பிக்க மலேசிய அரசாங்கம் திட்டமிடவில்லை என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று தெரிவித்தார். அதற்குப் பதிலாக குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.
"குறிப்பிட்ட ஓர் இடத்தில் கிருமிப் பரவல் அதிகம் இருந்தால் அவ்விடத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்படும். அது கிராமம் அல்லது மாவட்ட
மாகக்கூட இருக்கலாம்.
"ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
"நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு மேலும் 5,000க்கும் மேற்பட்டோர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்றும் அரசாங்கம்
தலையிடவில்லை என்றால் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000ஆக அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது," என்றார் திரு இஸ்மாயில்.
மலேசியாவில் கொவிட்-19 கிருமி அதிகம் பரவக்கூடிய இடங்
களாக குறிப்பிட்ட சில கடைத்தொகுதிகள், பேரங்காடிகள்,
மளிகைக்கடைகள் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
150 இடங்களைக் கொண்ட
பட்டியலை மலேசிய அரசாங்கம் நேற்று வெளியிட்டது.
பட்டியலில் இடம்பெறும் இடங்கள் ஒரு வாரத்துக்குக் கண்காணிக்கப்பட்டன.
அவற்றில் 80 விழுக்காடு இடங்கள் தலைநகர் கோலாலம்பூரிலும் சிலாங்கூர் மாநிலத்திலும் உள்ளன.
பிரபல கடைத்தொகுதிகளான பங்சார் கடைத்தொகுதி, சூரியா கெஎல்சிசி, மிட் வேலி கடைத்தொகுதி, சோகோ காம்பளெக்ஸ், சிலாயாங் கடைத்தொகுதி அவற்றில் அடங்கும் என்று மலாய் மெயில் நாளிதழ் தெரிவித்தது.