இந்தியாவில் கொவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க ஏறக்குறைய எல்லா மாநிலங்களுமே ஏதோ ஒரு வகையில் முடக்கத்தை, ஊரடங்கை, கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன என்றாலும் கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் 400,000க்கும் அதிக மக்களுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் முடக்கத்தை அறிவித்தாலொழிய கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது என மத்திய அரசுக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,092 பேர் மாண்டுவிட்டதாக நேற்று சுகாதார அமைச்சு அறிவித்தது. மொத்த மரண எண்ணிக்கை 242,362 ஆகிவிட்டது. தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் நாட்டில் தொற்றும் மரணமும் கூடிவருகின்றன. பல மருத்துவ மனைகளில் படுக்கைகளும் ஆக்சிஜனும் இல்லாமல் நிலைமை மோசமாக இருக்கிறது. சவக்கிடங்குகளும் தகனச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன.
தொற்றை ஒடுக்க புதுடெல்லி, உத்தரப் பிரதேசம் இரண்டும் மே 17 வரை முடக்கத்தையும் ஊரடங்கையும் நீட்டித்தன. தமிழ்நாட்டில் இன்று முதல் முழு ஊரடங்கு நடப்புக்கு வருகிறது.
இந்தியாவில் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அனைவருக்கும் உரிய மைய அமைப்பான இந்திய மருத்துவர்கள் சங்கம், நன்கு திட்டமிடப்பட்ட, முழுமையான, நாடளாவிய முடக்கத்தை முன்னதாகவே அறிவித்து நடைமுறைப்படுத்த வேணடும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேல் விவரங்கள், நாளைய முரசில்...