ராகுல்: அஞ்சுகிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி: பிரதமர் மோடி சீனாவைக் கண்டு அஞ்சுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 'காலவரிசையைப் புரிந்துகொள்ளுங்கள்' எனும் தலைப்பில் 54 வினாடிகள் கொண்ட காணொளிப்பதிவு ஒன்றை தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கிழக்கு லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்த நிகழ்வுகள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 'மிஸ்டர் 56 அங்குலம் சீனாவைக் கண்டு அஞ்சுகிறார்' என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வான் மோதல்: சீனாவின் கருத்தை திட்டவட்டமாக நிராகரித்தது இந்தியா
புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பான சீனாவின் கருத்துகளை நிராகரிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதி தொடர்பான ஒப்பந்தங்களை இந்தியா மீறிவிட்டதாக சீனா கூறியிருப்பது தவறான தகவல் என்று இந்திய தரப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது. "கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த மோதல் விவகாரத்தில் எங்கள் நிலை தெளிவாகவும் நிலையாகவும் உள்ளது. "சீனா கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டதுடன், எல்லையில் நிலவும் இயல்பு நிலையையும் தன்னிச்சையாக மாற்ற முயன்றது. இதுவே மோதலுக்கு வித்திட்டது," என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
2024ல் அனைத்து கிராமங்களுக்கும் மின்னிலக்க தொடர்பு வசதி
பெங்களூரு: எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்னிலக்க தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இக்குறிப்பிட்ட திட்டத்தை மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுத்தும் என்றார். கிராமப்புற வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குஜராத்தின் முதல் பெண் சபாநாயகர்
அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆச்சாரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு தரப்பின் ஆதரவுடன் அவர் போட்டியின்றித் தேர்வானார். குஜராத் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த ராஜேந்திர திரிவேதி, கடந்த 16ஆம் தேதி பதவி விலகியதை அடுத்து நிமாபென் ஆச்சாரியா தேர்வாகி உள்ளார். இதற்கிடையே, பதவி விலகிய ராஜேந்திர திரிவேதி மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடிய மெட்ரோ ரயில் அட்டை அறிமுகம்
புதுடெல்லி: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தக் கூடிய பயண அட்டை சேவையை வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அட்டை மூலமாக மெட்ரோ ரயில்களில் மட்டுமல்லாமல் பேருந்துகளிலும் பயணம் செய்ய இயலும். மேலும் சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிட கட்டணம், வங்கிப் பரிவா்த்தனைகள், சில்லறை வா்த்தகம் ஆகியவற்றுக் கும் பயன்படுத்தலாம். அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதற்கு முன்பு அனைத்துச் சேவைகளையும் வழங்குவதற்கான தொழில்நுட்பப் பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துவங்காத கணக்கில் ரூ. 10 கோடி
பாட்னா: பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளியான விபின் சவுகானின் வங்கிக் கணக்கில் அவருக்குத் தெரியாமல் பத்து கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் வங்கிக் கணக்கு தொடங்க அருகில் உள்ள வங்கிக்குச் சென்றபோது அவரது பெயரில் ஏற்கெனவே ஒரு கணக்கு இருப்பதும் அதில் தொகை இருப்பதும் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் போலிசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி: மத்திய அரசு தங்களுக்கு சாதகமாக செயல்படக்கூடிய அதிகாரிகளுக்கு டெல்லி காவல்துறையில் முக்கிய பொறுப்புகளை அளித்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
எனவே டெல்லி உயர் நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பரத்வாஜ் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அவர் சாடினார்.
டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் வைத்து, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜிதேந்தர் கோகி என்ற ரவுடிக்கும்பல் தலைவன் மர்மக் கும்பலைச் சேர்ந்தவர்களால் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், அங்கு காவலில் இருந்த காவல்துறையினர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
போலிசார் நடத்திய பதில் தாக்குதலில் அக்கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், டெல்லி காவல்துறையில் தங்களுக்கு சாதகமாக உள்ள அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் நியமித்து அனைத்து விதிமுறைகளையும் மத்திய அரசு மீறி வருவதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நீல்கண்ட் பக்ஷி, பதற்றம் ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழும்போது அனைவரும் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
ஆனால் இதுபோன்ற தருணங்களில்கூட ஆம் ஆத்மி அரசியல் விளையாட்டை தவிர்க்காமல் இருப்பது சரியல்ல என்றும் நீல்கண்ட் பக்ஷி மேலும் குறிப்பிட்டார்.