புதுடெல்லி: இந்திய எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தான் போராளியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அவரது பெயர் அலி பாபர் பட்ரா என்பதும் வயது 19 என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
உரியில் உள்ள ராணுவத் தளத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை உயிரோடு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீரில் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதி எல்லையில் சிலர் ஊடுருவ முயற்சி செய்தபோது அவர் பிடிபட்டதாக இந்திய ராணுவம் கூறியது.
இந்தச்சம்பவத்தில் மற்றொரு போராளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிக்கிய நபர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஒகாரா மாவட்டத்தில் உள்ள திபால்பூரைச் ேசர்ந்தவர். கொல்லப்பட்டவர் காரி அனாஸ் என்றழைக்கப்படும் 33 வயது அடிக்-உர்-ரெஹ்மான். இவரும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அடோக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
பெருமளவில் ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டதால் அதனை தடுத்து நிறுத்துவதற்காக இந்திய ராணுவ வீரர்கள் பதில் நடவடிக்கை எடுத்தனர்.
இதில் நான்கு வீரர்கள் காயம் அடைந்தனர். ஒரு கும்பல் பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டது என்று இந்திய ராணுவம் கூறியதாக டெக்கான் குரோனிக்கல் குறிப்பிட்டது.
உரியில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த ராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் வீரேந்திரா வாட்ஸ், ஒகாராவைச் சேர்ந்த மறைந்த முஹமட் லத்தீஃபின் மகனான பாபர் அலி பட்ரா தான் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.
2019ல் அவ்வியக்கம் நடத்திய ராணுவப் பயிற்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.
தன்னுடைய தாயின் கைபேசி எண்ணை அவர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார் என்று அந்த ராணுவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்த ஏழு போராளிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.