புதுடெல்லி: கர்நாடகாவில் கன்னடத்தில் பொறியியல் பாடம் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாய்மொழியில் பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட உள்ளது.
இத்தகவலை அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அஷ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னட மொழியில் பொறியியல், மருத்துவம் கற்பிக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்ததாகவும் அதை அரசு ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
கன்னட வழியில் பொறியியல் பாடங்களைக் கற்பிக்க அனுமதி கோரி கர்நாடக அரசு தேசிய அங்கீகார வாரியத்திடம் விண்ணப்பித்து இருந்தது என்றும் அதை அவ்வாரியம் ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் அஷ்வத் நாராயண் தெரிவித்தார்.
"முதற்கட்டமாக, நான்கு பொறியியல் கல்லூரிகளில் கன்னட வழியில் பொறியியல் கற்பிக்கப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் முப்பது மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கான வகுப்புகள் இம்மாத இறுதியில் தொடங்கும்.
"கன்னட வழியில் பயில்வோரை ஊக்குவிக்கும் நோக்கில் குறைந்த கட்டணம், கல்வி ஊக்கத்தொகை ஆகியவையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ," என்றார் அமைச்சர் அஷ்வத் நாராயண்.