கோல்கத்தா: பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி (படம்) வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 56 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று தமது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார் மம்தா பானர்ஜி.
அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் அவர் தோல்வி கண்டார். எனினும், அதிக தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து மம்தா முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆறு மாதங்களுக்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படாவிட்டால் அவர் முதல்வர் பதவியை இழக்க வேண்டியிருக்கும். இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபன்தீப் சந்தோபத்யாயே தமது பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து பவானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே இத்தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் மம்தா.
தற்போது மூன்றாவது முறையாக அவர் அத்தொகுதியில் இருந்து எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பவானிபூர் உட்பட மேற்கு வங்கத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பவானிபூரில் 53 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகின.
பாஜக சார்பில் பெண் வழக்கறிஞர் பிரியங்கா டிப்ரிவால் களமிறங்கினார்.
நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தொடக்கம் முதலே மம்தா பானர்ஜி முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் 56,388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தம்மை அதிகாரத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு சதி செய்தது என்றும் அதை மேற்கு வங்க மக்கள் முறியடித்தனர் என்றும் வெற்றிக்குப் பின்னர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தோல்வி அடைந்த போதிலும் இத்தேர்தலில் தாமே ஆட்ட நாயகி என்று பாஜக வேட்பாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
மம்தா: மத்திய அரசின் சதியை மேற்கு வங்க மக்கள் முறியடித்துவிட்டனர்