புதுடெல்லி: உலகம் முழுவதும் பரபரப்பையும் பல்வேறு விவாதங்களையும் எழுப்பி உள்ள 'பண்டோரா பேப்பர்ஸ்' குறித்து கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ளும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டுக்குழுவில் நாட்டில் உள்ள பல்வேறு விசாரணை அமைப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வரி குறைவாக உள்ள பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் நிறைய சொத்துகள் வாங்கி இருப்பதாகவும் முதலீடு செய்திருப்பதாகவும் 'பண்டோரா பேப்பர்ஸ்' மூலம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற உள்ளனர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் நீரவ் மோடி உள்ளிட்ட ஏராளமான இந்திய பிரமுகர்கள் வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்திருப்பதாக 'பண்டோரா பேப்பர்ஸ்' தெரிவித்துள்ளது.
அதன் பட்டியலில் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள 600க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் புலனாய்வு செய்து திரட்டிய தகவல்கள், 14 உலக அளவிலான பெரு நிறுவனங்களில் இருந்து கசிந்த சுமார் 19 மில்லியன் கோப்புகளில் உள்ள தகவல்கள் 'பண்டோரா பேப்பர்ஸ்' என்ற தலைப்பின் கீழ் வெளியாகி உள்ளன. ஏராளமான உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பற்றிய விவரங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் இதே போல் முக்கிய ஆவணத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அச்சமயம் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில் சர்ச்சை பெரிதாகிவிடாமல் இருக்க, பிரிட்டனில் வர்ஜின் தீவுகளில் இருந்த தனது நிறுவனத்தை சச்சின் டெண்டுல்கர் மூடிவிட்டதாக 'பண்டோரா பேப்பர்ஸ்' தெரிவிக்கிறது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தவர்களும் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களும் வெளிநாடுகளில் பெரும் தொகையை முதலீடு செய்திருப்பதாக 'பனாமா பேப்பர்ஸ்' தெரிவிக்கிறது.
இதையடுத்து, மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள கூட்டுக்குழுவானது இந்த விவகாரம் தொடர்பான விசாரணையைக் கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருளாதார முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்த பட்டியலை அனைத்துலகப் புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிடவில்லை என்றும் முறைகேடுகள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.