புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த மாதம் 30ஆம் தேதியன்று உத்தரகாண்ட் மாநில எல்லையிலும் சீன வீரர்கள் ஊடுருவ முயன்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அண்மையில் அருணாசலப் பிரதேச மாநில எல்லையில் உள்ள தவாங் என்ற பகுதிக்குள் சீன வீரர்கள் ஊடுருவினர். எனினும் அடுத்த சில நிமிடங்களில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இரு தரப்பும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு பதற்றம் அதிகரித்த நிலையில், சீன வீரர்கள் மீண்டும் தங்களது எல்லைப் பகுதிக்கு திரும்பினர். சரியான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைத் தகராறு நீடிக்கிறது.
"அண்மையில் தவாங் பகுதியில் இரு தரப்பிலும் வழக்கமான சுற்றுக்காவல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வீரர்கள் சுமார் நூறு பேர், இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினர். இதற்கு இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் மூண்டது. அடுத்த சில மணி நேரம் பதற்றம் நீடித்தது. பின்னர் அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடந்தது. சீன வீரர்கள் பின்வாங்கினர்," என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.