புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் மின்னுற்பத்தி நிலையங்களின் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குப் போதிய நிலக்கரி உள்ளதாகவும் இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் இந்திய நிலக்கரி அமைச்சு உறுதி கூறியுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன்கள் என்றும் இது நான்கு நாட்களுக்குப் போதுமானது என்றும் கூறிய அமைச்சு, நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் 400 லட்சம் டன்களுக்கு மேல் நிலக்கரி இருப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டது.
நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிப்பதுடன் அலுமினியம், சிமெண்ட், எஃகு போன்ற ஆலைகளுக்கும் நாள்தோறும் 2.5 லட்சம் டன் நிலக்கரியை நிலக்கரி இந்தியா நிறுவனம் அனுப்பி வருவதாகவும் நாட்டில் நிலக்கரி இருப்பு போதிய அளவில் உள்ளதையே இது பிரதிபலிக்கிறது என்றும் அமைச்சு விளக்கியது.
நிலக்கரி நிறுவனங்களில் இருந்து அதிக அளவில் நிலக்கரி கிடைப்பதால் அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி இந்தாண்டு சுமார் 24% அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு சுட்டியது.
இந்தியாவில் பாதிக்கும் அதிகமான அனல் மின் நிலையங்கள் போதிய நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தியைக் குறைத்துவிட்டதாகவும் அனல் மின் நிலையங்களில் அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் அமைச்சு தெரிவித்தது.