கொச்சி: குறைந்த வருமானமே ஈட்டியபோதும், தம் மனைவி மோகனாவுடன் 26 நாடுகளுக்குச் சென்றுவந்த தேநீர்க் கடைக்காரரான கே.ஆர்.விஜயன், நேற்று வெள்ளிக்கிழமை தமது 71வது வயதில் இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார்.
ஆனாலும், ஏராளமான அனுபவங்களை அவர் விட்டுச்சென்றுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சி நகரில் இருக்கும் இவரது ‘பாலாஜி காப்பி ஹவுஸ்’ கடைக்குச் சென்றவர்கள், பெரிய உலக உருண்டையைத் தங்களது கடையில் அத்தம்பதியர் வைத்திருந்ததைக் கண்டிருக்கலாம்.

ஆலப்புழாவின் சேர்தலாவைச் சேர்ந்த திரு விஜயனின் ஊர் சுற்றும் பயணம் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது.
பள்ளிக் கட்டணம் செலுத்த வைத்திருந்த 6 ரூபாய் 25 பைசாவைக் கொண்டு அவர் எர்ணாகுளம் சென்றார். பள்ளி நாள்களில் வீட்டைவிட்டு ஓடி, டெல்லி, ஹரித்துவார் நகர்களுக்குச் சென்றுவந்தார்.
திருமணத்திற்குப்பின், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக மனைவியின் நகையை அடைமானம் வைத்துப் பெற்ற பணத்தை ஒரு பயணத்திற்குப் பயன்படுத்திக்கொண்டார். அதன்பின், விஜயன் - மோகனா இணையர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றுவந்தனர்.
2007ஆம் ஆண்டில் திருப்பதி சென்றிருந்தபோது, தலைக்குமேல் பறந்த விமானத்தைக் கண்டதும் வெளிநாடு செல்லும் எண்ணம் திரு விஜயனுக்குத் தோன்றியது.

அதன்படி, முதன்முறையாக 2008 புத்தாண்டின்போது அவர்கள் வெளிநாடு சென்றனர். எகிப்து, ஜோர்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளுக்கு அவர்கள் சென்று வந்தனர்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, வத்திகன் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர்கள் சென்று வந்தனர். வத்திகனில் போப்பாண்டவரை சந்தித்தது திரு விஜயனின் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று.
இஸ்ரேல்தான் திரு விஜயனுக்குப் பிடித்தமான நாடு.
தேநீர்க் கடையில் கிடைத்த வருமானத்தில் சேமித்ததுபோக, வெளிநாட்டுப் பயணங்களுக்காக வங்கியில் கடனும் பெற்றனர்.
2014ல் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்திற்காக நடிகர்கள் அமிதாப் பச்சனும் அனுபம் கெரும் ஆளுக்கு ரூ.50,000 வழங்கினர்.

கடைசியாக, இவ்வாண்டு அக்டோபரில் விஜயன் - மோகனா இணையர் ரஷ்யா சென்று வந்தனர். அப்போது மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் சென்றிருந்தனர்.
மகள்கள் சசிகலாவும் உஷாவும் தம் பெற்றோருடன் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தெரிந்திருந்தும் திரு விஜயன் ரஷ்யப் பயணத்திற்குத் திட்டமிட்டார்.
ரஷ்யா செல்ல இருநாள்களுக்குமுன், “சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டேனும் நான் கனவு கண்டுள்ள இடங்களுக்குச் சென்றுவர விரும்புகிறேன்,” என்று ‘மனோரமா டிராவலர்’ சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலின்போது திரு விஜயன் கூறினாராம்.
“கனவும் முயற்சியும் இருந்தால் எவரும் வெளிநாடு சென்றுவரலாம். அந்த வகையில், நான் செல்வந்தனே!” என்றும் அவர் சொன்னாராம்.
திரு விஜயனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளோரில் புகழ்பெற்ற எழுத்தாளர் என்.எஸ்.மாதவனும் ஒருவர்.“வாரம் இரண்டு நாள்களுக்கு திரு விஜயன் எனக்குத் தேநீரும் நொறுக்குத்தீனியும் கொடுத்து வந்தார். ஓர் உலகப் பயணி, பயணக் கதைசொல்லி, மனத்தளவில் இளமையான நண்பர், உலகம் சுற்றிய தேநீர்க் கடைக்காரர் மறைந்துவிட்டார். அண்மையில் ரஷ்யா சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்க அவர் விரும்பினார்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் திரு மாதவன் பதிவிட்டுள்ளார்.