புதுடெல்லி: இந்தியாவில் ஒருபுறம் புதிய வகை ஓமிக்ரான் கிருமிப் பரவலும் மற்றொருபுறம் கொவிட்-19 கிருமிப் பரவலும் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன. வருங்காலத்தில் இந்தப் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம் நாடெங்கும் 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று புதிதாக 27,553 பேரை இத்தொற்று பீடித்ததாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொற்றால் 284 பேர் உயிரிழந்த நிலையில், இப்பாதிப்பில் இருந்து 9,249 பேர் மீண்டு வீடு திரும்பினர்.
இதேபோல், நாட்டில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் 1,525 ஆக அதிகரித்துள்ளது.
ஓமிக்ரான் தொற்றில் இருந்து 560 பேர் குணமடைந்த நிலையில், 965 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 460 பேருக்கும் தலைநகர் டெல்லியில் 351 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து மக்களுக்கு சிகிச்சைகளை வழங்க முன்கூட்டியே தயார்ப்படுத்திக் கொள்ளும்படி மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதார உள்கட்டமைப்பு விரைவில் அழுத்தத்துக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளதால் உயிர்வாயு போதிய அளவில் கிடைப்பதைக் கண்காணிக்குமாறும் மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா பரவியதால் புதிதாக 9,170 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனா பரவலைத் தடுக்க இன்று 3ஆம் ேததி முதல் நாடெங்கும் உள்ள 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து 28 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இதற்கிடையே, "உருமாறிய ஓமிக்ரான் தொற்று முக்கியமாக நுரையீரலைவிட மேல் சுவாசப் பாதை, காற்றுப்பாதைகளையே பாதிக்கிறது. எனவே இணை நோய்கள் இல்லாதவர்கள் பதற்றம் அடையாமல் மருத்துவமனை படுக்கைகளைத் தவிர்க்கவேண்டும், வீட்டுத் தனிமையில் இருந்து குணமடையவேண்டும்," என்று எய்ம்ஸ் மருத்துவமனைத் தலைவர் ரந்தீப் குலேரியா அறிவுறுத்தி உள்ளார்.