புதுடெல்லி: வடஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடுங்குளிரும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் பனிப்பொழிவு காரணமாக அங்கு முக்கிய சாலைகள் பலவும் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம், நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு குளிர் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் லடாக் உள்ளிட்ட பகுதிகள், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் இன்று கனமழை அல்லது கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் கூறியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிமை முதல் இமாச்சலப் பிரதேசத்தில் நீடித்து வரும் பனிப்பொழிவால் அங்கு நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், மாநிலத்துக்குள் 731 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தடைபட்டுள்ள மின்சாரம், நீர் விநியோகத்தைச் சீரமைக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பனிப்பொழிவுக்கு மத்தியில் கங்ரா பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட பதின்ம வயது மாணவர்கள் நால்வரில் இரண்டு பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று காலை முதல் பனிமூட்டம் நிலவியது. அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் குளிர்காற்று வீசும் என்றும் கிழக்குப் பகுதியில் அடர்ந்த பனி நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்தது.

