கோதுமை, சீனி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது இந்தியா. இந்த வரிசையில் அரிசியும் சேர்த்துக்கொள்ளப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடந்தால் உலகளாவிய உணவு பாதுகாப்பில் பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சில உணவு வகைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளன.
கோதுமை, சோளம் போன்றவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அரிசி ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா தடையை அமல்படுத்தினால் பல மில்லியன் பேர் பஞ்சத்துக்குத் தள்ளப்படுவர் என அஞ்சப்படுகிறது.
நாட்டின் அரிசி கொள்முதல் குறித்து கலந்து ஆலோசிக்க அண்மையில் இந்தியாவில் அமைச்சர்நிலைக் கூட்டம் இடம்பெற்றதாகத் தகவல்கள் குறிப்பிட்டன. போதிய அளவில் அரிசி இருப்பதாகவும், அதன் விலை சீராக உள்ளதாகவும் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் பங்கெடுத்த சிலர் கூறினர்.
இந்நிலையில் அரிசி ஏற்றுமதிக்குத் தற்போது தடை ஏற்படாது என்று அவர்கள் நம்புகின்றனர்.