கொவிட்-19 பரவலுக்குப் பின்னர் இந்தியாவில் விமானப் பயணக் கட்டணங்கள் 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதை அடுத்து, இந்தியப் பயணிகளுக்குக் குறைந்த கட்டண விமானப் பயணங்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது.
சில பிரபலமான வெளிநாட்டு இடங்களுக்கான விமானப் பயணக் கட்டணங்கள் இந்த ஆண்டு 45 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன என்று பயணச்சீட்டுப் பதிவுத் தளமான இக்சிகோ கூறியது. மற்ற பதிவுத் தளங்களும் இதையே தெரிவிக்கின்றன.
அதே வேளையில் உள்நாட்டு விமானச் சேவைகளும் ஜனவரி, பிப்ரவரியில் இருந்ததைவிட தற்போது 30 முதல் 35 விழுக்காடு கூடியுள்ளதாக இக்சிகோ கூறுகிறது.
இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணத் துறையில் 80 விழுக்காட்டுப் பங்கை குறைந்தக் கட்டண விமான நிறுவனங்கள் வகிக்கின்றன.
உலக அளவில் விமான எரிவாயு விலை, ஜனவரியிலிருந்து 55 விழுக்காடு உயர்ந்துள்ளதால் விமானப் பயணக் கட்டணங்களும் மிகவும் கூடியுள்ளன.
விமான நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகளில் கிட்டத்தட்ட பாதி அளவு விமான எரிவாயுவுக்கே செல்வதுதான் இதற்குக் காரணம் என்றார் இன்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரொனொஜோய் டட்டா.
விமான நிறுவனங்களின் செயல்திறன் இன்னும் கொவிட்-19 பரவலுக்கு முந்தைய அளவுக்கு மீட்சி அடையவில்லை.
அதே நேரத்தில் விடுமுறைக்காக வெளிநாட்டுக்கும் மற்ற இந்திய நகரங்களுக்கும் செல்வோரும் அதிகரித்துள்ளனர் என்று விஸ்தாராவின் தலைமை வர்த்தக அதிகாரியான திரு தீபக் ராஜாவாட் கூறினார்.
இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து புறப்படும் தனது விமானச் சேவைகள் தொற்றுப்பரவலுக்கு முந்தைய அளவில் கிட்டத்தட்ட முக்கால்வாசியை அடைந்துவிட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
விமானப் பயணக் கட்டணங்கள் கீழ் இறங்காது என்று வாடிக்கையார்கள் பயந்தாலும், விமான எரிவாயு விலைகள் குறையும்போது கட்டணங்களும் குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதனுடன், ஆகாசா, ஜெட் ஏர்லைன்ஸ் போன்றவை விரைவில் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளதாலும் விலைகள் குறையும் என்று அவர்கள் தெரிவித்தனர்.