லக்னோ: கணவரும் அவரது குடும்பத்தாரும் செய்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் இந்திய பெண் ஒருவர் அமெரிக்காவில் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அதற்கு முன்னதாக, அவர் கண்ணீர் மல்கப் பேசும் காணொளிப் பதிவு ஒன்றை அந்தப் பெண் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் கேட்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கும் வகையில் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மந்தீப் கவுர் என்ற 30 வயதான அந்தப் பெண்ணுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் நியூயார்க் நகருக்குப் பறந்தார் மந்தீப் கவுர்.
மண வாழ்க்கைப் பற்றிய கனவுகளுடன் அமெரிக்கா சென்றடைந்த அவருக்கு கணவரின் உண்மையான முகம் தெரியத் தொடங்கியது.
வரதட்சணையாக 50 லட்சம் ரூபாய் வாங்கித்தருமாறு நிர்பந்தித்து மந்தீப் கவுரை சித்திரவதை செய்யத் தொடங்கினார் அவரது கணவர். மேலும், ஆண் குழந்தைதான் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கணவர் குடும்பத்தாரும் தங்கள் பங்குக்கு மந்தீப்பை கொடுமைப்படுத்தத் தொடங்கினர்.
தினந்தோறும் அடியும் உதையுமாக கொடுமைப்படுத்திய போதிலும், கணவரின் போக்கைப் பொறுத்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார் மந்தீப்.
இந்நிலையில் சித்திரவதைகள் அதிகரிக்கவே, தன் தந்தையைத் தொடர்புகொண்டு புலம்பியுள்ளார். தினமும் மது அருந்திவிட்டு கணவர் தம்மை அடித்துத் துன்புறுத்துவதாக மகள் கண்ணீருடன் தெரிவிக்க, மனமுடைந்து போன மந்தீப் கவுரின் தந்தை உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
எனினும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில நாள்களிலேயே மந்தீப்பிடம் அவரது கணவர் பலவிதமாக கெஞ்சி புகாரை திரும்பப்பெற வைத்துள்ளார்.
இந்நிலையில்தான், மந்தீப் கவுர் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுத்துள்ளார். தனது மரணத்திற்கு தனது கணவரும் மாமியாரும்தான் காரணம் எனவும் இருவரும் தம்மை வாழவே விடவில்லை என்றும் காணொளிப் பதிவில் மந்தீப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக தனது கணவர் அடித்து துன்புறுத்தியதாகவும் என்றாவது ஒரு நாள் கணவர் மாறுவார் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"இனிமேலும் சித்திரவதைகளை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது. எனக்குச் செய்த கொடூரத்திற்கு எல்லாம் அவர்கள் கடவுளிடம் பதில் சொல்லியே தீர வேண்டும். எனவே குழந்தைகளை விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்," என்று காணொளிப் பதிவில் மந்தீப் கவுர் உருக்கத்துடன் குறிப்பிட்டிருப்பது அதைப் பார்ப்பவர் மனதைக் கரைய வைக்கும் விதமாக உள்ளது.
இதையடுத்து, மந்தீப்பின் கணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.