புதுடெல்லி: வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் உள்ள அதிபர் மாளிகையின் கலாசார மையத்தில் நேற்று நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக மன்றக் கூட்டம் நடைபெற்றது.
இதில் 23 மாநில முதல்வர்கள், மூன்று துணை நிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், முழு நேர உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திரு மோடி, கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கிய பங்காற்றியது என்று குறிப்பிட்டார்.
"இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதற்கு வழி வகுத்தது. ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளியல் நிலையை வலுப்படுத்தவும், 5 டிரில்லியன் டாலர் பொருளியலாக மாறவும் இது முக்கியமானது.
"மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் துறையை நவீனமயமாக்க வேண்டும். அதன் மூலம் விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய முடியும், உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும். விரைவான நகரமயமாக்கல் பலவீனத்திற்குப் பதிலாக இந்தியாவின் பலமாக மாறும். சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும்," என்று பிரதமர் மோடி கூறினார்.