பாட்னா: பீகாரில் பாரதிய ஜனதா கட்சி-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மெகா கூட்டணி இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
ஆட்சியைப் பிடிக்க 122 தொகுதி களில் வெற்றி பெற்றாக வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தக் கூட்டணியில் இடம்பெற்று இருந்த பாஜக-74, ஜேடியு-43, விஐபி-4, ஹெச்ஏஎம்-4 இடங்களில் வெற்றி பெற்றன.
லாலு பிரசாத் கட்சி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணியில் ஆர்ஜேடி-75, காங் கிரஸ்-19, இடதுசாரிகள்-16 இடங்களில் வெற்றி பெற்றன.
லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் மிகவும் சொற்பமான இடங்களைப் பெற்றதால் தேஜஸ்வி யாதவ் முதல்வராகும் வாய்ப்பு நழுவியது.
இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் நிதிஷ் குமார் முதல் வரானார். பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் நிதிஷ்குமார் முதல்வரானார்.
ஆனால் பீகாரில் செல்வாக்குமிக்க கட்சியாக விளங்கிய நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று அக்கட்சியை உறவாடி அழித்துவிட்டதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் பாஜகதான் முதல்வர் நிதிஷ் குமாரை நியமித்துள்ளது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, தேசிய அரசியலிலும் எதிரொலித்துள்ளது.
அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் நிதிஷ் குமார் பங் கேற்கவில்லை.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்க நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஐக்கிய ஜனதாதள கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் கூட்டம் நடைபெறு கிறது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
பாஜக தலைமையிலான ஜன நாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறினால் அதற்கு ஆர்ஜேடி (லாலு பிரசாத் யாதவ் கட்சி), காங் கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சி கள் ஆதரவளிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.