புதுடெல்லி: பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (படம்) கூறியிருக்கிறார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் ஐக்கிய நாட்டுப் பொதுச்சபையின் 77வது உச்சநிலை மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
"நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, பயங்கரவாதத்தைச் சிறிதளவும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை உறுதியாக வலியுறுத்தி வருகிறது.
"எத்தகைய பயங்கரவாதச் செயலையும், அதன் அடிப்படைக் காரணம் எவ்வளவு உயரியது என்று கூறிக்கொண்டாலும், அதனை நியாயப்படுத்த முடியாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு," என்றார் அவர்.
உலக நாடுகள் அடையாளம் காட்டிய பயங்கரவாதிகளுக்குப் பரிந்து பேசும் நாடுகள் அதனால் தங்கள் சொந்த நலனுக்கோ தங்கள் நற்பெயருக்கோ எந்த நற்பலனையும் அடையப்போவதில்லை என்றார் அமைச்சர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், லஷ்கா்-இ-தொய்பா போன்ற பயங்கரவாதக் குழுக்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் விதமாக இந்தியா ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் கொண்டுவந்த தீா்மானங்களை, சீனா தனது 'வீட்டோ' அதிகாரத்தால் நிராகரித்ததை ஜெய்சங்கா் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் குறித்துப் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா அமைதியின் பக்கம் இருப்பதாகவும் இருதரப்பும் பேசி விரைவாக நல்ல தீர்வை எட்டுவதையே இந்தியா விரும்புகிறது என்றும் தமது உரையில் குறிப்பிட்டார்.