புதுடெல்லி: அன்னியச் செலாவணி சட்டத்தை மீறிச் செயல்பட்ட சீன கைப்பேசி நிறுவனத்தின் ரூ.5,551 கோடியை மத்திய அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த சியோமி குழுமம் இந்தியாவிலும் கைப்பேசி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் அனுமதி இன்றி அந்நிறுவனம் ரூ.5,551 கோடிக்குச் சமமான அன்னியச் செலாவணியை இந்தியாவுக்கு வெளியே அனுப்பியதாகப் புகார் எழுந்தது.
இந்த நடவடிக்கையானது, அன்னியச் செலாவணி சட்டத்தை மீறும் செயலாகும். இதையடுத்து, அமலாக்கத்துறை அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது.
விசாரணையின்போது காப்புரிமை தொடர்பாக இந்தத் தொகையை சீனாவுக்கு அனுப்ப வேண்டி இருந்ததாக சியோமி நிறுவனம் விளக்கம் அளித்தது. ஆனால், அன்னியச் செலாவணி அனுப்புவதற்கு அந்நிறுவனம் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை முன்வைப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சியோமி நிறுவனத்துக்குச் சொந்தமாக ரூ.5,551 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்தியாவில் அமலாக்கத்துறையால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிகமான தொகை இதுவாகும்.