அகமதாபாத்: உக்ரேன், ரஷ்யா இடையேயான போரின் காரணமாக அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கு அழுத்தம் தரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்தகைய அழுத்தத்தை எதிர்கொண்டு மத்திய அரசு உரிய முடிவுகளை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.
"உக்ரேன், ரஷ்யா இடையே போர் வெடித்ததும் பெட்ரோல் விலை இரட்டிப்பாக அதிகரித்தது. நாம் எங்கிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டது.
"ஆனால், நமது நாட்டுக்கு எது சிறந்ததோ அதனைச் செய்ய வேண்டும் என்பதே பிரதமர் மோடி, மத்திய அரசின் பார்வையாக இருந்தது. அழுத்தம் தரப்பட்டால், நாம் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
போர் நடந்துகொண்டிருந்தபோது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் பிரதமர் மோடி தொலைபேசி வழி தொடர்பு கொண்டதாகவும் இரு தரப்பினரும் சில நாள்களுக்குப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
"உக்ரேனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களை பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் என பிரதமர் மோடி முடிவு செய்தார். அதற்காகவே போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
"இதன் காரணமாகவே போர் சூழலுக்கு மத்தியிலும் இந்திய மாணவர்கள் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்," என்று ஜெய்சங்கர் மேலும் கூறினார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதற்கு இந்தியா முடிவு செய்தபோது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் அந்த எதிர்ப்புகளை மீறி இந்தியா செயல்பட்டது. ரஷ்யா தனது இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் விற்க முன் வந்ததே இதற்குக் காரணம். இந்தப் பரிவர்த்தனை மூலம் இந்தியாவுக்கு இதுவரை ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.