அகமதாபாத்: குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் கல்வித்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
இந்நிலையில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவசக் கல்வி வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
குஜராத்தில் ஏற்கெனவே உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் பல புதிய பள்ளிகள் மாநிலம் முழுவதும் அதிக அளவில் திறக்கப்படும் என்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"குஜராத்தில் பிறந்த அனைவருக்கும் இலவச, தரமான கல்வி கிடைக்கும். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்.
"பெற்றோரிடம் பணம் இருந்தால் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். ஆனால் அவர்களிடம் பணம் இல்லையென்றால், அவர்களின் குழந்தைகளுக்கு பணப்பற்றாக்குறையால் நல்ல கல்வி கிடைக்காமல் இருக்க விடமாட்டோம்," என்றார் முதல்வர் கெஜ்ரிவால்.
அனைத்து தனியார் பள்ளிகளும் தணிக்கை செய்யப்படும் என்றும் அப்பள்ளிகளின் நிர்வாகம் மாணவர்களின் பெற்றோரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து இருந்தால் அத்தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
"பெண்களுக்கான உயர்கல்விக்குரிய வசதிகள் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்யும்.
"ஆட்சிக்கு வந்த கையோடு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்றார் முதல்வர் கெஜ்ரிவால்.