பாலேஸ்வர்: மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா நகரில் வசித்துவரும் ஹெலராம் மாலிக் என்பவரின் மகன் விஸ்வஜித் (24) கோல்கத்தாவிலிருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். இதனிடையே, ஒடிசா ரயில் விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஹெலராம் தனது மகன் விஸ்வஜித்தை கைப்பேசியில் அழைத்துப் பேசினார். அப்போது, தான் உயிருடன் இருக்கிறேன். ஆனால், கடுமையாகக் காயமடைந்ததாக உடைந்த குரலில் விஸ்வஜித் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஹெலராம் தனது உறவினர் ஒருவருடன் அவசர சிகிச்சை வாகனத்தில் பாலசோர் விரைந்துள்ளார்.
230 கி.மீ. தூர பயணத்துக்குப் பிறகு காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று விஸ்வஜித்தை தேடி உள்ளார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே இதுகுறித்து சிலரிடம் விசாரித்தபோது, அங்கிருந்த ஒருவர், காயமடைந்தவர் மருத்துவமனைகளில் இல்லையென்றால், சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பாஹநாகா உயர்நிலைப்பள்ளிக்குச் சென்று தேடிப்பாருங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால், தன் மகன் உயிரிழந்திருப்பார் என அவர்கள் கூறியதை ஹெலராம் ஏற்கவில்லை. எனினும் அங்கு சென்று தேடினார். அப்போது ஓர் உடலில் இருந்து கை அசைவதை ஹெலராம் பார்த்தார். அது வேறு யாருமல்ல. அவருடைய மகன் விஸ்வஜித்தான். சடலங்களுக்கு இடையே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது மகனை அங்கிருந்து தூக்கி அவசர சிகிச்சை வாகனம் மூலம் பாலேஸ்வர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஹெலராம். எனினும், கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விஸ்வஜித்தை அழைத்துச் செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பின்னர் தனது மகனை கோல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார் ஹெலராம். அங்கு விஸ்வஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கவலைக்கிடமாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.