உள்நாட்டு நீர்மூழ்கி வெடிகுண்டு பரிசோதனை வெற்றி
புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் குண்டுகளை இந்தியக் கடற்படை நேற்று முன்தினம் பரிசோதனை செய்து பார்த்தது. அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது என கடற்படையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ‘டார்பிடோ’ எனும் நீருக்கடியில் சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் நீர்மூழ்கிக் குண்டு, நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது. இது, இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாகும் என்று அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் கணினி ஊடுருவல் முறியடிப்பு
புதுடெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கணினிக் கட்டமைப்பு மீது இணையத் தாக்குதல் நடத்தி ஊடுருவும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அந்த மருத்துவமனையின் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு அந்த மருத்துவமனையின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவல் நடத்தப்பட்டது. அதையடுத்து, அம்மருத்துவமனை நவீன தொழில்நுட்பத்திற்கு தனது பாதுகாப்புக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர் பயிற்சி: இந்தியா, பிரிட்டன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுடெல்லி: வழக்கறிஞர்களுக்கு அனைத்துலகச் சட்டம் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சியை மேற்கொள்ள ஏதுவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரிட்டனும் கையெழுத்திட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அனைத்துலகச் சட்டம் குறித்த அறிவினைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இந்திய சட்டக் கழகத்தின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா இது குறித்து தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தில் இந்திய சட்டக் கழகம், பிரிட்டன் மற்றும் வேல்ஸ் சட்டக் கழகம் ஆகியவை கையெழுத்திட்டுள்ளன என்று திரு மிஸ்ரா தெரிவித்தார்.