ஹைதராபாத்: தமிழகத்தைப் பின்பற்றி தெலுங்கானாவில் அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள், அதிகாரிகள் ஆகியோர் மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். காலை உணவுத் திட்டத்திற்கு மாநில அரசு ரூ.400 கோடி ஒதுக்கியுள்ளது.
மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்ல சத்தான உணவு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 67,147 அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிட்டத்தட்ட 23 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று மாநில நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.
வகுப்புகள் தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும்.
காலை உணவாக இட்லி சாம்பார், கோதுமை ரவா, உப்புமா, சட்னி, பூரி உருளைக்கிழங்கு, குருமா, தக்காளி சாதம், கிச்சடி, பொங்கல் ஆகியவை வழங்கப்படும்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதின் மூலம், படிப்பில் அவர்களின் கவனத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பள்ளிக் குழந்தைகளின் பசிப்பிணியை நீக்கி, அவர்கள் கல்வி பயிலும் வகையில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அது மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு சத்துணவு திட்டமாக மாறியது. தொடர்ந்து, பின்னர் வந்த முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலங்களிலும் இந்த திட்டம் மேலும் மெருகூட்டப்பட்டது.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்ததும், அனைத்துப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தெலுங்கானாவில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தெலுங்கானா மாநிலப் பள்ளிகளிலும், காலை உணவுத் திட்டத்தை கொண்டு வர முதலமைச்சர் கேசிஆர் முடிவு செய்தார். இதுகுறித்து அறிந்துகொள்ள அண்மையில் தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர்.

