பெங்களூரு: கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, ரூ.439.7 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் அவர் மீதுமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, பெலகாவியில் சவுபாக்யா சர்க்கரை ஆலை நடத்தி வருகிறார். இதன் வளர்ச்சிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம்ஆண்டு வரை கர்நாடகா கூட்டுறவு வங்கியில் ரூ.232.88 கோடி கடனாகப் பெற்றார்.
ஆனால் வட்டி, அசல் மற்றும் அபராதம் ஆகியவற்றை முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து, அசல், வட்டி, அபராதம் என மொத்த நிலுவை ரூ.439.7 கோடியாக உள்ளது. கூட்டுறவு வங்கி பல முறை வலியுறுத்தியும் அவர் கடனைச் செலுத்தவில்லை.
இதனால் வங்கி நிர்வாகம் பெலகாவியில் உள்ள விஸ்வேஸ்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதன்பேரில் ரமேஷ் ஜார்கிஹோளி, அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் மீது காவல்துறையினர் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

