ப. பாலசுப்பிரமணியம்
சிங்கப்பூரில் பொதுவாக பயிற்சி அறைகள் அல்லது இல்லங்களிலேயே பெரும்பாலோர் யோகா பயிற்சியில் ஈடுபடுவர். ஆனால் நாளை ஞாயிற்றுக்கிழமை லிட்டில் இந்தியாவின் இந்து சாலைக்கு அருகில் உள்ள திறந்தவெளித் திடல் யோகா திடலாக மாற இருக்கிறது. வண்ணமிகு குடை அலங்காரங்களுடன் அந்தப் பகுதியில் முதல்முறையாக யோகா வகுப்பை இலவச மாக நடத்தவிருக்கிறார் குமாரி நெ.நித்தியா. இந்த வித்தியாசமான முயற்சி குறித்து இவரிடம் கேட்டதற்கு, "சிங்கப்பூர் போன்ற நவீன நகரங்களில் மனநலம், உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சற்றுக் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருக் கிறது. ஒரு சமூக நடவடிக்கையாக யோகாவை நடத்தி சிங்கப்பூரர்களிடையே தொடர்புகளையும் புரிந்துணர்வையும் வளர்க்க உதவலாமே என்ற எண்ணத்தில் பிறந்ததுதான் இந்த முயற்சி," என்றார் சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்த சிங்கப்பூர் இளையர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியில் இருந்து இலவச யோகா பயிற்சியை நடத்த லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்தப் புதுமையான முயற்சிக்கு ஆதரவாக தொண்டூழியர்களையும் நன்கொடையாளர்களையும் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் குமாரி நித்தியா. லிட்டில் இந்தியா குடியிருப்பாளர்கள், யோகா பிரியர்கள், வெளிநாட்டுத் திறனாளர்கள் என சுமார் 30 பேர் இந்த யோகா பயிற்சிக்கு முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் சுமார் 15 இடங்கள் நாளை நேரடியாக வந்து பயிற்சியில் ஈடுபடுவோருக்கு ஒதுக்கப்படும் என்றும் குமாரி நித்தியா சொன்னார். இந்த ஒன்றரை மணி நேரப் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு இலவச சைவ காலை உணவு வழங்குவதற்கு ஆதரவு திரட்டி வரும் நித்தியா, போதிய ஆதரவு கிடைத்தால் மாதம் இருமுறை இந்த இலவச யோகா பயிற்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள் ளார். இம்முயற்சிக்கு ஆதரவு அளிக்க அல்லது மேல் விவரம் அறிய tekkayoga@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.