வில்சன் சைலஸ்
கடை உணவைவிட வீட்டில் சமைக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவது இந்தியர்களிடம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதாக சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் நடத்திய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. நகரமயமான சிங்கப்பூரில் பல்லின மக்களிடையே ரத்தத் தில் கொழுப்பு எந்தளவு அதிக மாக உள்ளது என்றும் இந்திய, மலாய், சீன மக்கள் எவ்வாறு அதைக் கட்டுக்குள் வைத்துள் ளனர் என்பதையும் கண்டறிய அக்டோபர் 2013ஆம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 2014 வரை அந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதில், மலாய், சீனர்களுடன் ஒப்பிடுகையில் வாரத்திற்கு சுமார் நான்கு முறையாவது காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்பதன் மூலம் இந்தியர்களால் தங்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதை ஆய்வு காட்டுகிறது. இதற்கான காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும் வீட்டிலேயே ஆரோக்கியமான உணவு தயாரித்து உண்ண முடிவுசெய்த இந்திய நோயாளிகளிடமும் இதே மாற்றத்தைக் காண முடிந் ததாக ஆய்வில் ஈடுப்பட்ட மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தனர்.
தெம்பனிஸ், பாசிர் ரிஸ் பல துறை மருந்தகங்களில் பரிசோதனைகளுக்காக வரும் ரத்தத்தில் கொழுப்பு உள்ள சுமார் 1,093 நோயாளிகளிடம் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தவறாமல் மாத்திரைகளை உட்கொள்ளுதல் ஆகிய பல்வேறு பழக்கங்கள் பற்றி கருத்து திரட்டப்பட்டது. அந்த ஆய்வில் ஆண்கள், பெண்கள் என 31 வயதிலிருந்து 80 வயதுக்குட்பட்ட நோயாளிகள் பங்கேற்றனர். 359 இந்தியர்கள், 365 மலாய்க்காரர்கள், 369 சீனர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம், ரத்தக் கொழுப்பு குறித்த சிகிச்சை குறித்து வெவ் வேறு இன நோயாளிகளுக்கு எத்தகைய ஆலோசனைகளை வழங்கலாம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கான உத்திகளைக் கண்டறிய மருத்துவர்கள் முற் படுகின்றனர்.