ப. பாலசுப்பிரமணியம்
இளமைப் பருவத்தில் படிப்பில் அவ்வளவு ஆர்வமில்லாமல் இருந்தார் திரு சி. ஞானசேகர். பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிப்பை நிறுத்திவிட்டு 18 வயதில் சிங்கப்பூர்க் குடியரசு கடற்படையில் சேர்ந்தார் அவர். பல ஆண்டுகள் கழித்து, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிங்கப்பூர்க் கடற்படையின் உபகாரச் சம்பளத்தில் பட்டயக்கல்வியை 2005ஆம் ஆண்டில் முடித்தார். அதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதால் அவருக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில், இவருக்கு 38 வயது.
இரு பிள்ளைகளுக்குத் தந்தையான இவருக்கு, நிலையான வேலைச் சூழல் இருந்தாலும் மனதில் ஒருவித திருப்தி இல்லாமல் இருந்தது. ஆரம்ப காலத்தில் இடை யிலேயே விட்ட படிப்பு, செய்யும் பணியில் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை, பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்ற காரணம் ஆகியவை இவரை மீண்டும் கல்விப் பயணத்தைத் தொடரத் தூண்டின. அதன்படி அவர் 2012ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் உபகாரச் சம்பளத்தில் முழு நேரமாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மின்னியல் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டார்.