ப. பாலசுப்பிரமணியம்
உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது தேசிய சேவையாளர் அப்துல் ஹாடி ஷாஜஹானின் தாயார் தேசிய தின அணிவகுப்பின் காட்சி அங்கத்தில் பங்கேற்றார். பல ஆண்டுகள் கழித்து, இப்போது தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறும் வாய்ப்பு ஷாஜஹானுக்கும் வந்துவிட்டது. நாளை நடைபெறும் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் சீருடை அணிகளில் சார்ஜண்ட் அப்துல் ஹாடி அங்கம் வகிக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அணியும் ஒன்று. இந்தத் துணை அணிவகுப்பு அணிகளில் ராணுவம், சிங்கப்பூர் குடியரசு கடற்படை, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை, இளையர் சீருடை படை ஆகியவற்றுடன் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
நோன்புப் பண்டிகையின்போது வீட்டிற்கு வந்த அனைவரிடமும், "என் மகன் இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்கிறான். அனைவரும் அணிவகுப்பைக் காணத் தவறாதீர்கள்," என தமது தாயார் பெருமிதத்துடன் கூறியதை அப்துல் ஹாடி நினைவுகூர்ந்தார்.