உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள். ஆனால், அதில் பாதிப்பேர் அகதிகளாக இருக்கின்றனர். அனைத்துலக அளவில் சுமார் 50 மில்லியன் சிறுவர்கள் போர், வன்முறை, துன்புறுத்தல்களால் சொந்த நாடுகளில் இருந்து வெளியேறி அகதிகளாக இருக்கும் அவலநிலை ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனிசெஃப்' அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அகதிகளாக வெளியேறிய 10 மில்லியன் சிறுவர்களோடு 28 மில்லியன் சிறுவர்கள் வன்முறை, துன்புறுத்தல்களால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் ஒரு மில்லியன் சிறுவர்கள் 'அகதி' என்ற அங்கீகாரம்கூட இல்லாமல் அலைந்துகொண்டிருக்கின்றனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சுமார் 17 மில்லியன் சிறுவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 20 மில்லியன் சிறுவர்கள் வன்முறை, துன்புறுத்தல் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐநாவின் அறிக்கை காட்டுகிறது. இந்தச் சிறுவர்களிடம் முறையான ஆவணங்களோ, பண வசதியோ இல்லாததால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலையில் அவர்கள் இருக் கின்றனர். இதற்கிடையே, சொந்த நாட்டிலிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்று தஞ்சம் புக 78 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மும்மடங்கு அதிகம்.
ராஃபா எல்லைப்பகுதி வழியாக எகிப்துக்குள் நுழைய இம்மாதம் 3ஆம் தேதி காத்திருந்த பாலஸ்தீனிய சிறுவர்கள். படம்: ராய்ட்டர்ஸ்