பள்ளிகளில் பிள்ளைகள் தவறு செய்தால் உடனே அவர்களை வகுப்பறைக்கு வெளியில் அறை ஒன்றில் தடுத்து வைப்பார்கள். இதுதான் நீண்ட நெடுங்காலமாக உலகம் முழுவதுமுள்ள பள்ளிகள் பின்பற்றும் தண்டிக்கும் முறையாக இருந்து வருகிறது. இதுபோன்று சிறுவர்களைத் தடுத்து வைத்து தண்டனையளிப்பதால் ஏதேனும் பலன் கிட்டியிருக்கிறதா-? இது சரியான முறைதானா என்று எந்த ஒரு பள்ளியும் ஆய்வுசெய்ததில்லை. அந்த முறையை மாற்றுவதற்கும் முன்வரவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஒரு பள்ளி, தவறு செய்யும் மாணவனைத் தடுத்து வைக்கும் இந்த முறையை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக தியான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்கள் தடுத்து வைக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையை இப்போது தியான அறையாக மாற்றியுள்ளது அந்தப் பள்ளி. அத்துடன் மாணவர்கள் ஏன் தவறிழைக்கிறார்கள் என்பதை அவர்களுடனேயே பேசி ஆலோசனை வழங்கும் ஏற்பாட்டையும் அந்தப் பள்ளி செய்கிறது. பிள்ளைகளைத் தண்டிப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு நல்வழி காட்டுவதே சிறந்த முறை என்கிறது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளியில் தியான முறை அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது எந்த ஒரு மாணவனும் தவறிழைத்தற்காகப் பள்ளியை விட்டு நீக்கப்படவில்லை. மாணவர்களைத் திட்டுவது, அவர்களை பலரின் முன்னிலையில் அவமானப்படுத்துவது போன்ற கொடூரமான செயல்கள் அவர்களின் மனதில் வாழ்க்கை முழுதும் நீங்கா வடுவாக உறுத்திக்கொண்டிருக்கும். எனவே, இதுபோன்ற கொடுமையான தண்டனைகளை ஒழித்து விட்டு அறிவுபூர்வமான பயனுள்ள வகைகளில் அவர்களைக் கவர்ந்து நல்வழிக்கு ஈர்க்கக்கூடிய வழிமுறையைக் கையாள்வதே சிறந்தது என்கிறது அந்தப் பள்ளி. இந்த உன்னதமான வழிமுறையை உலகத்தில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றும் காலமும் வரலாம்.