மலேசியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும் கல்வியாளருமான முனைவர் ரெ.கார்த்திகேசு (படம்) நேற்று காலமானார். ரெ.கா என்று அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்ட அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அவருக்கு வயது 76. காலனித்துவ காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்குக் குடிபெயர்ந்த தமிழர்களின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த திரு காரத்திகேசு, தோட்டப்புறத் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்ப் பயின்று பின்னர் ஆங்கிலமும் மலாயும் கற்றுத் தேர்ந்தார். மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவில் ஒலிபரப்பாளராகப் பணியைத் தொடங்கி அதன் துணைத் தலைவராகவும் நிர்வாகியாகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பினாங்கில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் பொதுமக்கள் தொடர்பு ஊடகப் பிரிவில் விரிவுரையாளரானார். அங்கு ஒலிபரப்புத் துறையில் விரிவுரையாளராகவும் துறைத்தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மலாயாப் பல்கலைக் கழகத்தில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் கீழ் 1968ல் இந்திய ஆய்வு இயல் துறையில் இளங்கலைப் பட்டமும் 1977ல் நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத் துறையில் முதுகலைப்பட்டமும் 1991ல் இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக் கழகத்தில் பொதுமக்கள் தொடர்புத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர் திரு கார்த்திகேசு. 12 வயது முதலே தமிழில் எழுத ஆரம்பித்த ரெ.கா மலேசியாவின் முன்னணி எழுத்தாளர். தமிழ்நாட்டில் கணையாழி, தீராநதி, இந்தியா டுடே, கல்கி ஆகிய இதழ்களில் சிறுகதைகளும் விமர்சனக் கட்டுரைகளும் எழுதியவர். தம்முடைய படைப்புக்களுக்காக மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் பல பரிசுகளை வென்றுள்ளார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து நாவல்கள், இரண்டு விமர்சனக் கட்டுரை நூல்கள் ஆகிய 12 நூல்களை அவர் எழுதியுள்ளார்.