தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிளின் அடுத்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கைப்பேசிகள் மட்டுமின்றி வேறு பல தயாரிப்புகளும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள கப்பர்டினோ நகரில் செவ்வாய்க்கிழமை (10 செப்டம்பர்) நடைபெறும் இந்நிகழ்ச்சியில் என்னென்ன வெளிவரலாம் என்பது குறித்த சில எதிர்பார்ப்புகள் இங்கே:
ஐ-போன்கள்
மூன்று புதிய ஐ-போன்கள் நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் விற்கப்பட்டு வரும் ஐ-போன் எக்ஸ்ஆர், ஐ-போன் எக்ஸ்எஸ், ஐ-போன் எக்ஸ்எஸ் மேக்ஸ் ஆகியவற்றுக்கு மாற்றாக அந்த மூன்று வடிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆயினும், தற்போதுள்ள கைப்பேசிகளும் புதிய கைப்பேசிகளும் தோற்றமளவில் மட்டும் மிகச்சிறிதாக வேறுபடும் எனக் கூறப்படுகிறது.
இருந்தபோதும் ‘ஐ-போன் 11’ என கவனிப்பாளர்கள் அழைக்கும் புதிய வடிவ கைப்பேசியில் பின்பக்க இரட்டைக் கேமரா (rear dual-camera) அமைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய ஐ-போன் எக்ஸ்ஆர் வடிவத்தின் பின்பக்க ஒற்றைக் கேமராவைக் காட்டிலும் (single rear camera) இது சிறந்தது.
கைப்பேசியின் பின்பகுதியில் காணப்படும் கேமரா வில்லைகளுக்கான இடம் சதுரம் போல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது (கீழ்கண்ட படத்தில்).
ஆப்பிள் கடிகாரம்
கடந்தாண்டு ‘ஐ-போன் எக்ஸ்எஸ்‘ வரிசை கைப்பேசிகள் வெளியிடப்பட்ட அதே நேரத்தில் ஆப்பிள் கடிகாரம் வரிசை நான்கும் வெளியிடப்பட்டது. எனவே, இவ்வாண்டு கடிகாரத்தின் ஐந்தாம் வரிசை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மடிக்கணினி
ஆப்பிள் புதிதான ஒரு மடிக்கணினியை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது, 16-அங்குல மேக்புக் மடிக்கணினியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.