சிறு வயதில் லண்டன் ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகத்திற்கு காஜல் அகர்வால் சென்று உலக பிரபலங்களின் மெழுகுச் சிலைகளைக் கண்டு மெய் மறந்ததுண்டு.
பிரபல இந்திய நடிகையான இவரின் மெழுகுச் சிலை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமைந்துள்ள ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகத்தில் கவர்ச்சி குறையாது அம்சமாக காட்சியளிக்கிறது.
பக்குவமாக, பல மணி நேரம் தீவிர உன்னிப்பான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட தமது மெழுகுச் சிலையின் அதிகாரத்துவ திறப்பு நிகழ்ச்சியில் காஜல் உட்பட அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் அங்கு கடந்தாண்டு அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலையை அடுத்து இவ்வாண்டு காஜலின் மெழுகுச் சிலை புதுவரவாக சேர்க்கப்பட்டுள்ளது.
“நடிப்பு சகாப்தமாக கருதப்படும் ஸ்ரீதேவியின் படங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். அவருக்கு இணையாக எனக்கு ஒரு மெழுகுச் சிலை இங்கு உருவாக்கப்பட்டிருப்பது எனது பாக்கியம்,” எனத் தெரிவித்தார் நிகழ்ச்சியில் தமிழ் முரசு நாளிதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்த காஜல்.
இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுடன் இணைவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த காஜல், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
அடுத்த சில நாட்களில் அதற்கான படப்பிடிப்பில் அவர் ஈடுபடப்போகிறார்.
அப்படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் பற்றி கேட்டபோது, அது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை. ஆனால் அது சுவாரசியமான கதாபாத்திரம் என்றும் அதற்கு தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள இந்திய தற்காப்புக் கலையான களரிபயட்டை அவர் முறையாக கற்று வருவதாகவும் கூறினார்.
அண்மையில் நடித்த ‘விவேகம்’ தமிழ்த் திரைப்படத்தில், அவர் 10 கிலோ உடையணிந்து, ஐரோப்பிய நாடுகளில் குளிர் பருவத்தில் காட்டன் சேலையை அணிந்து படப்பிடிப்பில் ஈடுபட்டது சவால்மிக்கதாக விளங்கினாலும் அதில் உணர்ச்சிமிக்க காட்சிகள் சிறப்பாக அமைந்ததில் திருப்தியடைந்தாராம்.
பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒரு ராணி, வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரம் அல்லது புராண கதாபாத்திரமாக இருக்க வேண்டியது அவசியமில்லை என்று சொன்ன காஜல், ஒரு நவீன பெண் கதாபாத்திரமாக நடித்து சமுதாயத்தினரிடையே ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றார். அடுத்து வெளிவரவிருக்கும் அவரது படங்கள் இதனை வெளிக்காட்டுமாம்.
தமிழ் முரசு நடத்திய சமூக ஊடகப் போட்டியில் கலந்துகொண்ட நான்கு அதிர்ஷ்ட ரசிகர்களுக்கு காஜலை நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பு இந்நிகழ்ச்சியில் கிட்டியது.
“காஜலிடம் உங்களது பலம் என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் தமது குடும்ப ஆதரவும் தியானம் செய்யும் பழக்கமும் இதுவரையில் சினிமா உலகில் நீடிக்க உதவியுள்ளன என்று பதிலளித்தார்,” என்றார் ரசிகர்களில் ஒருவரான திருமதி கு.ஷாமளா, 41.