மின்னிலக்கமயமாக்கல் முயற்சிகள் உணவங்காடி கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளன. மின்னிலக்க முறைக்கு மாறியதன்மூலம் ஏற்பட்டுள்ள அனுகூலங்கள் குறித்து உணவுக் கடைக்காரர்கள் விவரிக்கின்றனர்.
திருமதி சயது முகமது ஜஸ்மீன், திருமதி கபத்துல்லா சபாரியா பானு இருவரும் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஹாஜி சையது ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தை நிர்வகித்து வருகின்றனர். இதற்கு முன்பு, டன்லஃப் ஸ்திரீட்டில் உணவுக் கடையை நடத்திவந்தார். உணவு வியாபாரத்தில் இவரும் இவரது குடும்பத்தாரும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
பிடோக்கில் உள்ள இக்கடையில் இஸ்லாமிய கடல் உணவு பிரபலமான ஒன்றாக வாடிக்கையாளர்களால் விரும்பி உண்ணப்படுகின்றது.
வார இறுதிகளும் தினசரி மாலை நேரங்களும் வாடிக்கையாளர்கள் அதிகம் வரக்கூடிய நேரங்கள் என்று திருமதி சபாரியா தெரிவித்தார்.
கொவிட்-19 காலம் சற்று தணிந்த அக்டோபர் மாத வாக்கில் இந்த உணவகத்தை ஆரம்பித்ததால் ஓரளவு வியாபாரத்தை சமாளிக்க முடிந்தது. மேலும் வீவக குடியிருப்பில் கடை அமைந்திருப்பதால் குடியிருப்பாளர்களின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. நேரடியாக வருவோரும் உணவை வாங்கிச் செல்வோரும் நல்ல எண்ணிக்கையில் இருந்தனர்.
கடையைத் திறந்த சில நாட்களிலேயே மின்கட்டண முறையை திருமதி சபாரியா அறிமுகப்படுத்திவிட்டார். அதன் பயனால் பல வாடிக்கையாளர்கள் மின் கட்டண முறையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பாக்கிப் பணம் கொடுத்தல், அதற்காக சில்லறை காசுகளை வங்கியில் மாற்றி வைத்துக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை மின்கட்டண முறை தவிர்த்துள்ளது வரவேற்கவேண்டிய மாற்றம் என்றார் திருமதி சபாரியா. நெட்ஸ் கட்டண முறையைக் காட்டிலும் மின் கட்டண முறை அதிக வசதியானது என்றார். வர்த்தகர்கள் கட்டணத்தை உறுதி செய்ததும் இயந்திரத்தில் உறுதி படிவத் தாளை கிழித்து வைத்துக்கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்கள் அவர்களது கைபேசியில் கட்டணம் கழிக்கப்பட்டதை அவர்களே பார்த்து உறுதி செய்துகொள்ளவேண்டும். இது இருவருக்கும் மிக வசதியாக உள்ளது என்றார் திருமதி சபாரியா.
அவரது வாடிக்கையாளர்களில் 45 முதல் 50% நபர்கள் இந்த மின் கட்டண முறையை பயன்படுத்திவருகின்றனர். தம் உணவகத்தில் செயல்படும் மற்ற உணவு ஸ்டால் உரிமையாளர்களையும் இந்த மின்கட்டண முறைக்கு மாறிட அறிவுறுத்தி யுள்ளார்.
நேரடியாக வங்கிக் கணக்குக்குச் செல்லும் பணம்
தனது 18 வயது முதல் உணவு வியாபாரத்தில் பணியாற்றிவந்துள்ளார் திரு. சம்சுதின் அப்துல் ரஹ்மான். அவருக்கு இப்பொழுது 47 வயதாகின்றது. ஓ நிலை கல்வி பயிலும் நாட்களில் தனது தந்தையாரின் உணவுக் கடையில் உதவி வந்துள்ளார். முன்பு செங்காங் அங்கர்வேல் உணவு அங்காடியில் 5 வருடங்களாக உணவுக் கடை நடத்திவந்தவர். கடந்த 2018 அக்டோபர் மாதம், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் முஸ்லிம் ஃபூட் என்ற தனது கடையை பாசிர் ரிஸ் சென்ட்ரல் ஹாக்கர் சென்டர் என்ற உணவங்காடி நிலையத்திற்கு இடம் மாறினார்.
தினமும் மாலை 6 முதல் 8 மணி வரை நல்ல கூட்டத்தை அவரது கடை சமாளித்து, சிறந்த முறையில் சேவை வழங்கிவருகின்றது.
கொவிட்-19 தொற்று பரவிய ஆரம்ப காலத்தில், அவரது வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல வாடிக்கையாளர்கள் வீட்டில் இருக்க வேண்டிய சூழலும் அவர்கள் இல்லங்களிலேயே சமைத்துக்கொண்டிருந்ததும் திரு அப்துல் ரஹ் மானின் வர்த்தகத்தை முடக்கியது. ஆயினும் அரசாங்கம் வழங்கிய வாடகை ஒத்திவைப்பு போன்ற உதவி அவருக்குப் பெரும் ஆதரவாக அமைந்தது. சுமார் 80% வியாபாரம் நஷ்டம் அடைந்த காலம் அது என்று திரு அப்துல் ரஹ்மான் நினைவுகூர்ந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டின் மத்தியில் இந்த மின்கட்டண முறையை அவர் கடையில் அறிமுகப்படுத்தினார். அந்த கட்டண முறை அவருக்குப் பல நன்மைகளைத் தந்தது. அனைவரும் எளிதில் புரிந்துகொண்டு பயன்படுத்தக்கூடிய கட்டண முறை என்று அவர் கூறினார். மேலும் மின்னியல் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்தால்தான் இந்த கட்டண முறையைப் பயன்படுத்த முடியும் என்பதில்லை என்றும் வலியுறுத்தினார்.
அவசரத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துவர மறந்துவிட்டாலும் இந்த ரொக்கமற்ற கட்டண முறை பெரிதும் உதவியாக உள்ளதாக சொன்னார் திரு ரஹ்மான். உணவு தயாரிப்பில் கவனம் செலுத்தும் நேரத்தில் கட்டணத்தை வசூலிப்பதைப் பற்றிய கவலை இன்றி அவரைப் போன்றோர் செயல்படுவதற்கு இது பெரும் உதவியாக உள்ளது.
அவரது கடைக்கு அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களில் 30% இளையர்கள் மற்றும் மத்திம வயதுடையவர்கள் இந்த மின் கட்டண முறையைப் பயன்படுத்துகின்றனர்.
இதன் பயன்பாட்டை சிறிதுகால பயிற்சிக்குப் பிறகு அறிந்துகொண்டு, அவரது கடைக்கு அருகில் உள்ள மற்ற கடைக்காரர்களுக்கும் திரு ரஹ்மான் மின்கட்டண முறையைப் பரிந்துரைத்துள்ளார். இதனுடன் சாங்கி வட்டாரத்தில் உணவுக் கடை நடத்திவரும் தம் உறவினருக்கும் இந்த கட்டண முறையின் பயன்களை எடுத்துரைத்து அவர்களையும் இதற்கு மாறிக்கொள்ள வேண்டியுள்ளார்.
இந்த கட்டண முறையை வியாபாரத்துக்குப் பயன்படுத்த தாம் ஒப்புதல் அளித்த சில நாட்களிலேயே அதிகாரிகள், மின் கட்டண பதாகைகளை அவரது கடையில் கட்டமைத்து, மிக எளிதாக அதை தாம் தொடங்கிவிட்டதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மிகவும் சுலபமான கட்டண முறையான இதனை பலரும் பயன்படுத்துவதை இவர் ஊக்குவிக்கின்றார். வியாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒருங்கே பயனளிக்கவல்ல இந்த முறை நீண்டகாலத்துக்கு நீடிக்கும் என்றும் அவர் விரும்புகின்றார்.
பரபரப்பான சூழலில், வாடிக்கையாளர்களும் வர்த்தகர்களும் மிக இயல்பாக இந்த ரொக்கமற்ற கட்டண முறையை சிங்கப்பூரின் பல உணவு நிலையங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
விளம்பரச் செய்தி