கொவிட் கிருமி பரவல் சூழலில் பலர் செல்லப் பிராணிகளுடன் அதிக நேரம் செலவழித்தவர்கள் கொரோனா காலத்தில் தங்களது மனநலம் பாதிப்படையாமல் பாதுகாத்துக்கொண்டதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
நாய், பூனை போன்ற விலங்குகளை வளர்ப்பது மன உளைச்சலைக் குறைக்கிறது. தனிமை உணர்வைப் போக்குகிறது. பொறுமை, அன்பு, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை வளர்க்கிறது.
செல்லப் பிராணிகளுடன் நேரத்தைச் செலவழிப்பது மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தத்தை போக்குகிறது.
வேலை நேரங்களில் ஏற்படும் மனச்சோர்வை சமாளிக்க உதவும்.
நாய் வளர்த்தால், அன்றாடம் வெளியில் நடக்க அழைத்துச் செல்ல வேண்டும். இது நாய் வளர்ப்பவரின் நடைப் பயிற்சி தொடர உதவுகிறது. இவ்வாறு உடற்பயிற்சியுடன் தோழமை உணர்வையும் செல்லப் பிராணிகள் வளர்க்கின்றன. நேர்மறையான எண்ணங்களையும் வளர்க்கக்கூடும்.
அதே நேரத்தில் முறையாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மட்டுமே, மனிதர்களின் மனதுக்கும் உடலுக்கும் நன்மை செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் அறிவுரை.
அத்துடன், ஒவ்வாமைப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியமும் உண்டு. செல்லப் பிராணிகளை வளர்ப்பது ஆஸ்துமாவைத் தூண்டும் என்று பல ஆய்வுகளும் மருத்துவர்களும் கூறியுள்ளனர்.
வளர்ப்புப் பிராணிகளின் உடலில் இருந்து உதிரும் செல்கள், ரோமம், உமிழ்நீர், சிறுநீர், மலக் கழிவு ஆகியவை காற்றில் கலந்து சுவாச, சரும ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.
இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத அளவிலேயே உள்ளன.
இவை உடைகள், சன்னல் திரைச்சீலைகள், சோபா, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மிதியடிகள், கழிவறை உபகரணங்கள், கைப்பிடிகள் போன்றவற்றில் பல வாரங்களுக்கு ஒட்டியிருக்கும்.
அவை உடலுக்குள் சென்று ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
பூனை, நாய், முயல், கிளி, புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளைத் தொட்டுத் தூக்கும்போதும், அவற்றோடு விளையாடும் போதும் இவை நேரடியாகவே உடலில் பட்டு ஒவ்வாமைக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
மூக்கு ஒழுகுவது, தும்மல், அரிப்பு, தடிப்பு, சருமம் சிவந்து வீங்குவது, ஆஸ்துமா போன்றவை ஏற்படுகின்றன.
எனினும் சில பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்தால் ஆஸ்துமா அதிகமாகும் சாத்தியத்தைக் குறைக்கலாம்.
வளர்ப்புப் பிராணியை தனியாக ஒரு அறையில் வளர்த்தால் பாதிப்புக் குறையும்.
படுக்கை அறைக்கு பிராணிகள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.
பூனை, நாய், முயல், கிளி போன்றவற்றைத் தொட்டுத் தூக்குவது, முத்தம் கொடுப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்
வீட்டை அடிக்கடி துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை வாரம் ஒருமுறை சூடான தண்ணீரில் ஊறவைத்து, அலசி சுத்தம் செய்ய வேண்டும். சன்னல் திரைச்சீலைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.
ஹெப்பா ஃபில்டர் (HEPA filter) பொருத்தப்பட்ட 'வேக்யூம் கிளீனர்' மூலம் சோபா, மிதியடி, படுக்கை விரிப்புகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.