சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் பல, தங்கள் அலுவலகங்களை நீக்குப்போக்கான முறையிலும் ஊழியர்கள் ஒருவருக்கொருவர் எளிதில் அணுகிக்கொள்ளும் வகையிலும் மாற்றியமைத்துள்ளன.
பணியாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், அவர்கள் அமர்ந்து பணிபுரியும் இடங்களை மாற்றியமைக்கும்போது, முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மேசை, நாற்காலிகளைப் பகிர்ந்துகொண்டு பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது. அதற்காக முதலாளிக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் விசாலமான தனி அறைகளையும் பெரிய மேசைகளையும் நீக்கி நீக்குப்போக்கான வேலையிடச்சூழல் உருவாகி வருகிறது.
இதுபோன்ற சூழலை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இதைத்தான் இப்போது சிங்கப்பூரில் பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம், ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்துதான் பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயமின்றி, அவர்கள், எங்கிருந்தும் பணிபுரியலாம் என்பதற்கேற்ப நிறுவனங்கள் ஒரு நீக்குப்போக்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
அலுவலகங்களில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிறுவனங்களில் மென்பொருள் நிறுவனமான 'எஸ்ஏபி'யும் ஒன்று. பாசிர் பாஞ்சாங்கில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்று தளங்களில் இயங்கி வரும் அந்த நிறுவனம் அதன் அலுவலகத்தில், மேசைகளின் வடிவமைப்பை முற்றிலும் இப்போதுள்ள வேலைச்சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளது.
பணியாளர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மேசை நாற்காலி என்று ஒதுக்கப்பட்டிருந்த நிலையை மாற்றியமைத்துள்ளது. அலுவலகத்தில் காலியாக இருக்கும் எந்தவோர் இடத்திலும் தங்கள் பணியைத் தொடரலாம். இதற்கு அந்த நிறுவனத்தின் மூத்த தலைவர்களும் விதிவிலக்கல்ல. நின்றுகொண்டே பணிபுரிய விரும்புகிறவர்களுக்கு ஏற்ப உயரமான மேசைகளும், சிறு குழுக்களாகப் பணிபுரிபவர்களுக்கேற்ப சில இடங்களும், தேநீர்க்கடையில் தேநீர் அருந்திக்கொண்டே பணிபுரிய விரும்புவர்களுக்கு ஏற்ப சில இடங்களில் தேநீர்க்கடை பாணியிலும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், கொவிட்-19 தொற்றைச் சமாளிக்கும் வகையில், தனது அலுவலகத்தை 2021 ஏப்ரலில் மாற்றியமைக்கத் தொடங்கியது.
அந்நிறுவனத்தில் 1,200க்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதோடு நீக்குப்போக்கான வகையில் இந்த மாற்றத்தை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி, தொற்றுக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இருப்பினும், தொற்று நெருக்கடி காலத்தின்போது நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்ட நீக்குப்போக்கான முறையையே தொடர்ந்து கடைப்பிடிப்பதாகக் கூறப்படுகிறது.