ஹனோய்: வியட்னாமில் நடந்து வரும் 31வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூருக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் சீலாட் விளையாட்டு வீரர் இக்பால் அப்துல் ரகுமான், 28.
ஆண்கள் ஒற்றையர் துங்கால் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் இல்யாஸ் சடாராவுடன் மோதினார் இக்பால். உலக வெற்றியாளரும் நான்கு முறை ஆசிய வெற்றியாளருமான இக்பாலுக்குப் பத்து நடுவர்களும் சராசரியாக 9.96 புள்ளிகளை வழங்கினர். தாய்லாந்து வீரருக்கு 9.930 புள்ளிகள் கிட்டின.
இதற்குமுன் ஐந்து முறை பங்கேற்றுள்ளபோதும் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இக்பால் தங்கம் வென்றது இதுவே முதன்முறை.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதற்குமுன் இவர் 2015ஆம் ஆண்டில் வெண்கலமும் 2019ஆம் ஆண்டில் வெள்ளியும் வென்றிருந்தார்.
வெற்றிக்குப்பின் உணர்ச்சி பொங்கக் காணப்பட்ட இக்பால், "இத்தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எனது திறன்மீது எப்போதுமே நான் நம்பிக்கை வைத்துள்ளேன்," என்றார்.
வீடு முழுக்க வெற்றிக் கிண்ணங்களும் பதக்கங்களும் நிரம்பி உள்ளபோதும் இவ்வெற்றியை முக்கியமானதாகக் கருதுகிறார் இவர்.
"இதுதான் எனக்கு எல்லாமே. 2018ஆம் ஆண்டில் உலக வெற்றியாளர் பட்டம் வென்ற எனக்கு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மட்டும் வெற்றி கைநழுவியபடியே இருந்தது," என்றார் இக்பால்.
"இந்தத் தங்கப் பதக்கம் எனக்கு மட்டுமானதல்ல. என் சக அணியினர் அனைவருக்குமானது. அவர்களில் பலரும் ஆறாவது முயற்சி மாயம் நிகழ்த்தும் என்று கூறினர். என்னால் முடிந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்படுவேன் என்று அவர்களிடம் உறுதியளித்தேன்," என்று உணர்ச்சிப் பெருக்குடன் இக்பால் கூறினார்.
போட்டிக்குப் பிறகு இக்பாலை ஆரத் தழுவி, தமது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்.
வியட்னாம் தலைநகரில் இருக்கும் அமைச்சர் எட்வின் டோங், "சிங்கப்பூருக்கு முதல் தங்கத்தை வென்று தந்துள்ள இக்பால், அடுத்து வரும் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்வார். அவரது மீள்திறனுக்கும் மனவுறுதிக்கும் கிடைத்த வெற்றி இது," என்று புகழாரம் சூட்டினார்.