பர்மிங்ஹம்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டத்திற்கான போட்டி இறுதிநாள்வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. பட்டியலின் இரண்டாம் நிலையிலுள்ள லிவர்பூல் குழு, முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி குழுவை விடாது தொடர்வதே அதற்குக் காரணம்.
லிவர்பூல் குழு நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தியது. ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே கோலடித்து, சொந்த அரங்கில் தமது குழுவை முன்னிலைபெறச் செய்தார் வில்லா ஆட்டக்காரர் டக்ளஸ் லூயிஸ். ஆனாலும், அம்முன்னிலை மூன்று நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.
லிவர்பூல் வீரர் விர்ஜில் வான் டைக் வலையை நோக்கி அனுப்பிய பந்தை வில்லா கோல் காப்பாளர் எமிலியானோ மார்ட்டினஸ் தடுத்தபோதும், மீண்டு வந்த பந்தை வலைக்குள் தள்ளி, ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார் ஜோயல் மட்டிப். பின்னர் 65வது நிமிடத்தில் சாடியோ மானே தலையால் முட்டி அடித்த கோல் லிவர்பூலுக்கு வெற்றி தேடித் தந்தது.
தற்போது மேன்சிட்டியும் லிவர்பூலும் 86 புள்ளிகளுடன் இருந்தாலும் சிட்டிக்குக் கூடுதலாக ஓர் ஆட்டம் கைவசமிருக்கிறது.