நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வருவது இயல்பே. அந்த வகையில், வட்டி விகிதம் குறைவாக வசூலிக்கப்பட்ட வீட்டுக்கடன் திட்டங்கள் இருந்ததால் வீடு வாங்குவோருக்கு கையிருப்பில் கூடுதல் பணம் வைத்திருக்க முடிந்தது.
இப்போது மாற்றம் சற்று வேகமாகவே இடம்பெற்றுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு, சில வங்கிகள் வழங்கிய வீட்டுக் கடன் திட்டங்கள் ஏறக்குறைய 1 விழுக்காடு வட்டி வசூலித்தன. ஆனால், இப்போது வட்டி 3 விழுக்காடு அல்லது அதற்கும் மேலாகிவிட்டது.
மத்திய சேமநிதிக் கழகத்தின் சாதாரண கணக்கிற்கு 2.5 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது.
இது, வீடு வாங்குவோர் ரொக்கத்தைக் கொண்டு வீட்டுக் கடனைச் செலுத்த ஓர் உந்துதலாக இருந்தது.
காரணம், மசேநிதி தொகையைக் கொண்டு அப்போது 1 விழுக்காடு வட்டியுடன் கூடிய கடனைச் செலுத்துவது அவ்வளவு பலன் தருவதாக அமையவில்லை.
ஆனால், இப்போது வங்கியில் இருந்து வீட்டுக் கடன் பெறுவோர், அதைத் திருப்பிச் செலுத்த தங்களது ஓய்வுக்கால நிதியில் கை வைக்க நேரிடும்.
உங்களது புது வீட்டிற்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) இருந்து கடன் பெறுகிறீர்களோ அல்லது ஏற்கெனவே உள்ள வீவக கடனைத் திருப்பிச் செலுத்துகிறீர்களோ, வட்டி விகிதம் அதிகரிப்பு பற்றி நீங்கள் கவலையடையத் தேவையில்லை.
ஏனெனில், அதன் 2.6 விழுக்காடு வட்டி, இப்போது உள்ள வட்டி விகிதங்களில் ஆகக் குறைவான ஒன்றாக உள்ளது.
எனினும், வீவக கடனில் இருந்து வங்கிக் கடனுக்கு மாறிய வீட்டு உரிமையாளர்கள், அதே வீட்டிற்காக மறுபடியும் வீவக கடனுக்கு விண்ணப்பிக்க இயலாது.
கூடுமானவரை வீட்டுக் கடனைச் செலுத்த மசேநிதியைவிட ரொக்கத்தைப் பயன்படுத்துவது சிறந்தது.
கையில் ரொக்கம் குறையும்போது, அத்தியாவசியம் அல்லாத பொருள்களில் செலவு செய்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
மசேநிதிக் கணக்கில் உள்ள தொகை, உங்கள் வங்கிக் கணக்கில் உள்ளதைவிட கூடுதல் வட்டியை ஈட்டுகிறது.
முக்கியமாக, உங்களிடம் ரொக்கம் குறையும்போது உதவிக்கு கிடைக்கும் வளமாக மசேநிதியைப் பார்க்கவும்.
அத்தகைய சூழ்நிலையில், கடனைச் செலுத்த மசேநிதி தொகையைப் பயன்படுத்த நீங்கள் கோரலாம்.
கையில் போதுமான ரொக்கம் இல்லாமலும் வீட்டுக் கடனுக்காக மசேநிதி கணக்கையும் நீங்கள் காலி செய்துவிட்டால், வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழலில் உங்களிடம் கூடுதல் நிதி இல்லாமல் போகலாம்.
வீட்டுக் கடனைச் செலுத்தி முடித்த பிறகு உங்கள் மசேநிதியில் இருந்து எடுத்த பணத்தை அதில் திருப்பி செலுத்துவது ஓய்வுக்காலத்திற்கான சிறந்த திட்டமிடுதல் ஆகும்.
கடனைப் பெறுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.