மூட்டு வலி, தசை வலி, வாயுக்கோளாறு போன்றவற்றுக்கு மிகச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது முடக்கத்தான் கீரை. இதில் 'சூப்' செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருள்கள்:
முடக்கத்தான் கீரை ஒரு கப், துவரம் பருப்பு இரண்டு தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி, சீரகம் இரண்டு தேக்கரண்டி, எண்ணெய் ஒரு தேக்கரண்டி, கடுகு அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் மூன்று , புளி சிறிதளவு, பெருங்காயம் சிறிதளவு, பூண்டு மூன்று பல், உப்பு தேவையான அளவு.
செய்முறை: கீரையில் இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றை நன்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். நான்கு குவளை தண்ணீர் எடுத்து உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதை இறக்கிவிட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்தால் முடக்கத்தான் சூப் தயார்.
படம்: இணையம்

